எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத் தொல்காப்பியத்தை உலகம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமின்றி வரலாற்றுக் கருவூலமாகவும் ...