(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

 01. அறத்துப் பால்

03. துறவற இயல்

அதிகாரம் 037. அவா அறுத்தல் 

பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,

   முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.

 

  1. அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,

     தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.

 

   தொடரும் பேராசைதான், எல்லா

       உயிர்களின் பிறப்புகட்கும் விதை.

 

  1. வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,

     வேண்டாமை வேண்ட வரும்.

 

       விரும்பின், பிறவாமையை விரும்பு;

       விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.

 

  1. வேண்டாமை அன்ன விழுச்செல்வம், ஈண்(டு)இல்லை;

     யாண்டும், அஃ(து)ஒப்ப(து) இல்.

 

       எதையும் விரும்பாமையே, ஒப்புமை

       இல்லாத மிகச்சிறந்த செல்வம்

.

  1. தூஉய்மை என்ப(து), அவாஇன்மை; மற்(று)அது,

     வாஅய்மை வேண்ட வரும்.

 

  பேராசை இல்லாமையே, மனத்தூய்மை;

       வாய்மையால்தான் அதுவும் வாய்க்கும்.

 

  1. அற்றவர் என்பார், அவாஅற்றார்; மற்றையார்,

     அற்றாக அற்ற(து) இலர்.

 

       பேராசை இல்லாரே, துன்பம்இல்லார்;

       மற்றையார் துன்பம்உள்ளார் ஆவார்.

 

  1. அஞ்சுவ(து), ஓரும் அறனே; ஒருவனை

     வஞ்சிப்ப(து), ஓரும் பழி.

 

  யாரையும், ஏய்த்துவிடும் பேராசைக்[கு]

       அஞ்சுதல் அறம்ஆம். ஆராய்க.

 

  1. அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை,

     தான்வேண்டும் ஆற்றான் வரும்.

 

       பேராசை முழுவதையும் போக்கின்,

       விரும்பும் நல்செயல்கள் வந்துசேரும்.

 

  1. அவாஇல்லார்க்(கு), இல்ஆகும் துன்பம்; அஃ(து)உண்டேல்,

     தவாஅது மேன்மேல் வரும்.

 

       பேராசை இல்லாதார்க்கே, பேரின்பம்;

       உள்ளார்க்கோ, மேன்மேலும் துன்பம்.

 

  1. இன்பம் இடையறா(து) ஈண்டும், அவாஎன்னும்,

     துன்பத்துள் துன்பம் கெடின்.

 

       துன்பத்துள் பெரும்துன்பம் பேராசை

       கெட்டால், இன்பத்துள் பெரும்இன்பமே.

 

  1. ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே,

     பேரா இயற்கை தரும்.

 

   நிறையாத பேராசையின் நீக்கம்,  

       பெயராத இன்பத்தின் ஆக்கம்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 038. ஊழ்)