திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை
(அதிகாரம் 046. சிற்றினம் சேராமை தொடர்ச்சி)
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை
நன்மை, தீமை போன்றவற்றை
நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள்.
- அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்
ஊதியமும், சூழ்ந்து செயல்.
ஆவது, அழிவது, பின்விளைவது
போன்றவற்றை ஆய்ந்து செய்க.
- தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு),
அரும்பொருள் யா(து)ஒன்றும், இல்.
செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து
செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை.
- ஆக்கம் கருதி, முதல்இழக்கும் செய்வினை,
ஊக்கார், அறி(வு)உடை யார்.
வருவாய்க்காக, முதல்இழக்கும் செயலை
அறிவார் செய்யத் தூண்டார்.
- தெளி(வு)இல் அதனைத் தொடங்கார், இளி(வு)என்னும்,
ஏதப்பா(டு) அஞ்சு பவர்.
இழிவுஆம் கேட்டிற்கு அஞ்சுவார்,
தெளிவுஇல் செயல்கள் தொடங்கார்.
- வகைஅறச் சூழா(து) எழுதல், பகைவரைப்,
பாத்திப் படுப்ப(து)ஓர் ஆறு.
செய்முறைகளை ஆராயாத செயல்தொடக்கம்,
பகைவர் வெற்றிக்கு வழி.
- செய்தக்க அல்ல, செயக்கெடும்; செய்தக்க,
செய்யாமை யானும் கெடும்.
செயத்தகாத செய்தல், செயத்தகுவன
செய்யாமை இரண்டுமே கேடு.
- எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின்,
‘எண்ணுவம்’ என்ப(து), இழுக்கு.
ஆராய்ந்து செயலைத் தொடங்கு;
தொடங்கியபின், ஆராய்தல் தவறு.
- ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று,
போற்றினும், பொத்துப் படும்.
செய்முறைப்படி முயலா முயற்சி,
பற்பலர் உதவினும் தோற்கும்.
- நன்(று)ஆற்றல் உள்ளும், தவ(று)உண்[டு], அவர்அவர்
பண்(பு)அறிந்(து), ஆற்றாக் கடை.
அவர்அவர் பண்பை அறியாது,
நல்லது செய்தாலும், கெட்டதுஆம்.
- எள்ளாத, எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு
கொள்ளாத, கொள்ளா(து) உலகு.
உயர்ந்தார் இகழ்ந்த – ஏற்றுக்
கொள்ளாத எச்செயலையும், செய்யற்க.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply