அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி

kuralarusolurai_mun attai

02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 089. உள்பகை   

 

வெளியில் தெரியாமல், மனத்துள்ளே

ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை

  1. நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும்,

     இன்னாஆம் இன்னா செயின்.

     நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்;

       நோய்தரும் உறவும், தீமைதான்.

 

  1. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக,

     கேள்போல் பகைவர் தொடர்பு.

      வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல்

       நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு.

 

  1. உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,

     மண்பகையின் மாணத் தெறும்.

     புதைசேற்றினும், உள்பகை, பேரழிவு;

       அதிலிருந்து காத்துக் கொள்,

 

  1. மனம்மாணா உள்பகை தோன்றின், இனம்மாணா

     ஏதம் பலவும் தரும்.

     மனம்சிறக்க உதவா உள்பகையால்,

       இனம்சிறக்காது; துன்பமும் ஆம்.

 

  1. உறல்முறையான் உள்பகை தோன்றின், இறல்முறையான்

     ஏதம் பலவும் தரும்.

     உறவினர்தம் உள்பகை, பலவகை

       மரணத் துன்பங்கள் தரும்.

 

  1. ஒன்றாமை, ஒன்றியார் கண்படின், எஞ்ஞான்றும்

     பொன்றாமை ஒன்றல் அரிது.

     ஒன்றுபட்டாரிடம் ஒன்றுபடாவிட்டால்,

       என்றும் அழிவே ஒன்றுபடும்.

 

  1. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே

     உள்பகை உற்ற குடி.

     செம்பின் மூடிபோல் ஒன்றுபட்டாலும்,

       உள்பகைக் குடியார் ஒன்றுபடார்.

 

  1. அரம்பொருத பொன்போல் தேயும், உரம்பொரு(து)

     உள்பகை உற்ற குடி.

     அரம்தேய்த்த பொன்போல், உள்பகை

       உரசினால் குடும்பமும் தேயும்.      

 

  1. எள்பக(வு) அன்ன சிறுமைத்தே ஆயினும்,

     உள்பகை உள்ள(து)ஆம் கேடு.

     எள்துண்டுபோல், உள்பகை சிறிதே

       ஆயினும், ஆம்கேடு பெரிது.

 

  1. உடம்பா(டு) இலாதவர் வாழ்க்கை, குடங்கருள்,

     பாம்போ(டு) உடன்உறைந்(து) அற்று.

      மனம்பொருந்தார் வாழ்க்கை, குடிசைக்குள்

       பாம்புடன் வாழ்வது போன்றது.

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன் :ve.arangarasan

(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை)