திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
2. பொருள் பால்
13.குடி இயல்
அதிகாரம் 100. பண்பு உடைமை
உலகத்தார் இயல்புகளை நன்குஅறிந்து
நலஉணர்வுடன் பழகுதலைப் பெறுதல்
- எண்பதத்தால் எய்தல், எளி(து)என்ப, யார்மாட்டும்,
பண்(பு)உடைமை என்னும் வழக்கு.
பண்புஉடைமை என்னும் வழக்கம்,
எளிமையாய்ப் பழகுவதால் வரும்.
- அன்(பு)உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்இரண்டும்,
பண்(பு)உடைமை என்னும் வழக்கு.
பண்பாளரின் இரண்டு சிறப்புகள்:
அன்பும், உயர்குடிப் பிறப்பும்.
- உறுப்(பு)ஒத்தல், மக்கள்ஒப்(பு) அன்(று)ஆல்; வெறுத்தக்க
பண்(பு)ஒத்தல், ஒப்ப(து)ஆம் ஒப்பு.
உறுப்புக்களால் அல்ல; உயரிய
பண்பால் ஒத்தாரே, நிறைமக்கள்.
- நயனொடு, நன்றி புரிந்த பயன்உடையார்,
பண்புபா ராட்டும் உலகு.
விருப்புடன் நன்மை செய்து,
பயன்தருவார் பண்பு, பாராட்டப்படும்.
- நகைஉள்ளும், இன்னா(து) இகழ்ச்சி; பகைஉள்ளும்
பண்(பு)உள பா(டு)அறிவார் மாட்டு.
வேடிக்கை என்றாலும், இகழாதே;
பகைவரையும், பண்பார் இகழார்.
- பண்(பு)உடையார்ப் பட்(டு)உண்(டு) உலகம்; அதுஇன்றேல்,
மண்புக்கு மாய்வது மன்.
பண்பாளிகளால் உலகம் உள்ளது;
இல்லை என்றால் அழிந்திருக்கும்.
- அரம்போலும் கூர்மையர் ஏனும், மரம்போல்வர்,
மக்கள்பண்(பு) இல்லா தவர்.
அரம்போல் கூர்அறிவார் ஆயினும்,
மரம்போல்வார் மனிதம் இல்லார்.
- நண்(பு)ஆற்றார் ஆகி, நயம்இல செய்வார்க்கும்,
பண்(பு)ஆற்றார் ஆதல் கடை.
நட்புக் கொள்ளாது, பகைமை
கொள்வாரொடும் பண்புடன் பழகு.
- நகல்வல்லர் அல்லார்க்கு, மாஇரு ஞாலம்,
பகலும்,பால் பட்(டு)அன்(று) இருள்.
சிரித்துப் பழகத் தெரியார்க்கு,
பகலும் இருள்நிறை இரவுதான்.
- பண்(பு)இலான் பெற்ற பெரும்செல்வம், நல்பால்
கலம்தீமை யால்திரிந்(து) அற்று.
அழுக்குப் பாத்திரப்பால் கெடல்போல்,
ஒழுக்குஇலான் செல்வமும் கெட்டு,விடும்.
பேரா.வெ.அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம்)
Leave a Reply