கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

 kavikondal senguttuvan 1

அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில்

அயல்மொழி எதற்கடா? – தமிழா

அயல்மொழி எதற்கடா?

முன்னைய மொழியாம் மூவா மொழியெனும்

முத்தமிழ் நமதடா! – அது

எத்துணைச் சிறந்ததடா!

வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி

ஆட்சிக்   கொரு மொழியா? -வழி

பாட்டுக் கொரு  மொழியா?

 

பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி

பலமொழி எதற்கடா? – தமிழா

பலமொழி எதற்கடா?

தமிழில் பேசு தமிழில் எழுது

தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத்

தமிழில் வழிபடுவாய்!

தமிழில் கல்வியைக் கற்பதே மேன்மை

தமிழில் பெயர் சூட்டு – பிள்ளைக்குத்

தமிழில் பெயர் சூட்டு!

அம்மா அப்பா அத்தை மாமா

அழகாய்ச் சொல்லிருக்க – தமிழா

ஆங்கிலச் சொல் லெதற்கு?

மம்மி டாடி ஆண்ட்டி அங்கிள்

மழலைகள் அழைப்பதுவா? – தமிழ்

மதிப்பை இழப்பதுவா?