தலைப்பு-சிறக்க வாழ்ந்திட : thalaippu_sirakka_vaazhndhida

சிறக்க வாழ்ந்திட !

 

மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போய்விடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் !

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா திருந்துவிடின்
சாதனையின் நாயகனாய்த் தலைநிமிர நின்றிடுவாய் !

அறத்தினைநினை அன்பையணை
சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு
இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு
சிறக்கவாழ்ந்திடச் சிந்தனைசெய்திடு !

அரக்கக்குணத்தை அடியோடழித்திடு
உரக்கவுண்மையை வாழ்வினிலுரைத்திடு
குறைக்குள்சென்றிடா மனத்தைத்தடுத்திடு
சிறக்கவாழ்ந்திடச் சிந்தையைச் செலுத்திடு !

தாழ்வுமனப்பான்மையினைத் தானழித்துநில்லு
வீழ்கின்றஎண்ணம்வரின் விரட்டியேகொல்லு
ஆர்வந்துஎதிர்த்தாலும் அன்புவழிநில்லு
அகிலமதிலுன்வாழ்வு அருத்தமுடனமையும் !

 

M.Jayarasasarma01

மெல்பேண்  செயராமர்