(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி)

attai-kuralarusolurai

02. பொருள் பால்
07. நாட்டு இயல்  
அதிகாரம் 074. நாடு    

நாட்டின் இலக்கணம், சிறப்புகள்,

நாட்டு மக்கள்தம் பண்புகள்.

  1. தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச்

   செல்வரும், சேர்வது நாடு.

 

       தொடர்விளைவு, தக்கார், உயர்மனச்

       செல்வர், இருப்பது நல்நாடு.

 

  1. பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால்

   ஆற்ற விளைவது நாடு.  

 

       பெரும்பொருளால், கேடும் இல்லா

       நிறைவிளைவால், அமைவது நாடு.

 

  1. பொறைஒருங்கு மேல்வரும்கால் தாங்கி, இறைவற்(கு)  

   இறைஒருங்கு நேர்வது நாடு.

                            

       சுமைகளைத் தாங்கி, நேர்மையாய்

       வரிதருவோரைப் பெறுவதே நாடு.

 

  1. உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும்,

   சேரா(து) இயல்வது நாடு.

            

       கொடும்பசி, தீராநோய், அழிபகை,

       சேராது நிற்பது சீர்நாடு.

 

  1. பல்குழுவும், பாழ்செய்யும் உள்பகையும், வேந்(து)அலைக்கும்

   கொல்குறும்பும், இல்லது நாடு.

 

       பல்குழுக்கள், உள்பகை, அச்சுறுத்தும்,

       வன்முறை இல்லது வெல்நாடு.

 

  1. கே(டு)அறியாக், கெட்ட இடத்தும், வளம்குன்றா

   நா(டு)என்ப, நாட்டின் தலை.

 

       கெடாது, கெட்டாலும், வளம்குறையாத

       நாடு, தலைநிலை நாடு.

 

  1. இருபுனலும், வாய்ந்த மலையும், வருபுனலும்,

   வல்அரணும், நாட்டிற்(கு) உறுப்பு.

 

       எல்லாவகை நீர்வளங்கள், மலைகள்,

        வன்கோட்டை, நாட்டின் உறுப்புக்கள்.

 

  1. பிணிஇன்மை, செல்வம், விளை(வு)இன்பம், ஏமம்,

   அணிஎன்ப நாட்டிற்(கு)இவ் ஐந்து.

                        

         நோய்இன்மை, நல்செல்வம், நீள்விளைச்சல்,

         பாதுகாப்பு, இன்பம், நாட்டழகு.

 

  1. நா(டு)என்ப, நாடா வளத்தன; நா(டு)அல்ல,  

நாட வளம்தரும் நாடு.

                      

       தேடா வளத்ததே நாடு; தேடி

       வளம்தருவது நாடு அன்று.    

 

  1. ஆங்(கு)அமை(வு) எய்தியக் கண்ணும், பயம்இன்றே,    

   வேந்(து)அமை(வு) இல்லாத நாடு.

 

       எல்லாம் இருந்தாலும், நல்அரசு  

       இல்லாயின், எப்பயனும் இல்லை.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம்   075. அரண்)