திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி)
02. பொருள் பால்
12. துன்ப இயல்
அதிகாரம் 087. பகை மாட்சி
படைஅறிவு, வலிமை, நல்துணை
பொறுமை போன்றன பகைச்சிறப்புகள்.
- வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
வலியார் பகையை, விலக்குக;
மெலியார் பகையை, விரும்புக.
- அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான்,
என்பரியும் ஏ(து)இலான் துப்பு….?
அன்பு,துணை, வலிமை இல்லான்,
பகைவரை எப்படி எதிர்கொள்வான்….?
- அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான்,
தஞ்சம் எளியன் பகைக்கு.
அஞ்சாமை, படைஅறிவு, ஒழுங்கு,
கொடைமைஎன இல்லான் தோற்பான்.
- நீங்கான் வெகுளி, நிறைஇலன், எஞ்ஞான்றும்,
யாங்கணும், யார்க்கும், எளிது.
நீங்காச் சினத்தான், மனக்கட்டுப்பாடு
இல்லான் யாரிடமும் தோற்பான்.
- வழிநோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான்,
பண்(பு)இலன், பற்றார்க்(கு) இனிது.
செயல்முறை, பழி,பண்பு ஆராயான்,
முடிந்ததையும் செய்யான்; தோற்பான்.
- காணாச் சினத்தான், கழிபெரும் காமத்தான்,
பேணாமை பேணப் படும்.
கடும்சினத்தான், மிகுந்த காமத்தான்
பகைவர் வெல்வற்கு வாய்ப்பாவான்.
- கொடுத்தும், கொளல்வேண்டும் மன்ற, அடுத்(து)இருந்து
மாணாத செய்வான் பகை.
அடுத்துஇருந்து கெடுப்பார்க்கு வேண்டியன
கொடுத்தும் துணையாக் கொள்.
- குணன்இலனாய்க், குற்றம் பலஆயின், மாற்றார்க்(கு)
இனன்இலன்ஆம் ஏமாப்(பு) உடைத்து.
குணம்,துணை இல்லான், குற்றத்தான்,
பகைவர் வெல்வதற்கு வாய்ப்பாவான்.
- செறுவார்க்கும் சேண்இகவா இன்பம், அறி(வு)இலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
படைஅறிவு இல்லாத, அஞ்சும்
பகைவனை எதிர்ப்பான், மகிழ்வான்.
- கல்லான், வெகுளும், சிறுபொருளும் எஞ்ஞான்றும்
ஒல்லானை, ஒல்லா(து) ஒளி.
கல்லாதான், சினத்தான், சிறுபொருளும்
இல்லாதான், வீரப்புகழ் பெறான்.
பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply